கோலாலம்பூர், ஜூன் 26– பொது இடங்களில் புகைபிடித்தது தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக தனிநபர்கள் மற்றும் வர்த்தக மைய உரிமையாளர்களுக்கு 335 குற்றப்பதிவுகளை சுகாதார அமைச்சு வழங்கியது.
இந்த குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையின் மதிப்பு 93,350 வெள்ளியாகும் என்று அமைச்சின் நோய்க் கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநர் டத்தோ டாக்டர் நோர்ஹயாத்தி ருஸ்லி கூறினார்.
நேற்றிரவு மாநகரின் 263 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது 2004 ஆம் ஆண்டு புகையிலை கட்டுப்பாட்டுச் சட்ட விதிகளின் கீழ் அவர்களுக்கு குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று மாலை 6.00 மணி தொடங்கி சுமார் ஐந்து மணி நேரத்திற்கு நீடித்த இந்த சோதனையில் சுகாதார அமைச்சு, உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு, காவல் துறை, அரச மலேசிய சுங்கத் துறை, கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த 220 அமலாக அதிகாரிகள் பங்கு கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.