ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 : நாட்டில் 1.6 கோடி பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், ஜூன் 26- நாட்டிலுள்ள பெரியவர்களில் 68.6 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 205 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 30 லட்சத்து 12 ஆயிரத்து 251 பேர் அல்லது 97.8 விழுக்காட்டினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ள வேளையில்  2 கோடியே 32 லட்சத்து 89 ஆயிரத்து 632 பேர் அல்லது 99 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதனிடையே, “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை 13 லட்சத்து 37 ஆயிரத்து 102 சிறார்கள் அல்லது 37.7 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

ஐந்து முதல் பதினோரு வயது வரையிலான அச்சிறார்களில் 49.2 விழுக்காட்டினர் அல்லது 17 லட்சத்து 44 ஆயிரத்து 485 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இது தவிர 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 29 லட்சத்து 10 ஆயிரத்து 021 பேர் அல்லது 93.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகவும் 29 லட்சத்து  98 ஆயிரத்து 844 பேர் அல்லது 96.4 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும்  பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

நேற்று நாடு முழுவதும் 10,645 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 848 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 9,113 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 684 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதனுடன் சேர்த்து பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 7 கோடியே 12 லட்சத்து 14 ஆயிரத்து 563 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :