ECONOMYNATIONAL

மீன் பிடிக்கும் போது நேர்ந்த துயரம்- 11 வயதுச் சிறுவன் கால்வாயில் விழுந்து மரணம்

குவாந்தான், ஜூன் 27– நண்பர்களோடு மீன் பிடிக்கும் போது கால்வாயில் தவறி விழுந்த தாக நம்பப்படும் 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த துயரச் சம்பவம் இங்குள்ள செங்கால் லெம்போங் பாலாய் ராயா அருகே நேற்று மாலை நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பில் தமது துறை இரவு 7.19 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கனி கூறினார்.

தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து கோபோங் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஐவர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

முன்னதாக, அந்த கால்வாயில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக சிறார்கள் உதவி கோரி கூச்சலிட்டதைக் கேட்டு அங்கு விரைந்த கிராம மக்கள் சோ வான் இஷ் அக்கில் அரிஸ் சே வான் அமிஸி என்ற அச்சிறுவனை மீட்டு கரை சேர்த்த தாக அவர் குறிப்பிட்டார்.

தீயணைப்பு வீர ர்கள் உடனடியாக அச்சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கினர். இதற்கிடையே ஆம்புலன்சில் அங்கு விரைந்த மருத்துவ பணியாளர்கள் அச்சிறுவனை சோதனை செய்து அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர் என்றார் அவர்.


Pengarang :