ஷா ஆலம், ஜூன் 27– சிலாங்கூர் அரசு அமல்படுத்தியுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்வதற்குரிய ஒரு தளமாக “ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்“ திட்டம் அமைந்துள்ளது.
கடந்த வாரம் கோல லங்காட், பந்தாய் மோரிப் சதுக்கத்தில் நடைபெற்ற இத்திட்டத்தின் வாயிலாக மக்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்களை அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டியதாக இந்நிகழ்வுக்கு வருகை புரிந்தவர்களில் ஒருவரான பி. பாலு கூறினார்.
மாநில அரசு என்ன செய்துள்ளது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பல திட்டங்களை அது அமல்படுத்தியுள்ளது. அத்தனை திட்டங்களும் மக்களுக்கு பயன்தரக்கூடியவையாகும் என்று அவர் சொன்னார்.
இந்த ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் வரும் காலங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். இங்கு மாநில அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள் மட்டும் வழங்கப்படவில்லை. மாறாக, பல்வேறு நிகழ்ச்சிகளும் பரிசுகளை வெல்வதற்குரிய வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன என்றார் அவர்.
சிறார்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு இந்த நிகழ்வுக்கு குடும்பத்துடன் தாம் வந்ததாக சின் சியு மேய் கூறினார்.
இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டுகளில் பங்கேற்கச் செய்வதற்காக என் பிள்ளைகளை அழைத்து வந்தேன். மாநில அரசின் நிறுவனங்களால் வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து இங்கு வந்த பிறகுதான் அறிந்து கொண்டேன். கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டப் பின்னர் எனக்கு நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
தன் தாயாருக்கு மூத்த குடிமக்களுக்கான உதவியைப் பெறுவதற்காக தாம் இந்நிகழ்வுக்கு வந்ததாக அஸ்னான் பிந்துகியாமான் சொன்னார்.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக எனது தாயாருக்கு உதவி விரைவாக கிடைத்தது. மாநில அரசின் இத்தகைய உதவித் திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.