ECONOMYNATIONAL

உணவு ஏற்றுமதிக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடை- உலகில் பணவீக்கம் ஏற்படும் அபாயம்

மும்பை, ஜூன் 27– “உலகிற்கு உணவளிப்போம்“ என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்ட நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் 24 மணி நேரத்தில் அந்த அறிவிப்பை மீட்டுக் கொண்டது.

உக்ரேன் விட்டுச் சென்ற இடைவெளியை நிரப்பும் வகையில் கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்கவுள்ளதாக உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளரான அந்நாடு அறிவித்திருந்தது.

வழக்கமாக, மிதமான அளவில் மட்டுமே கோதுமையை ஏற்றுமதி செய்த இந்தியா, உள்நாட்டுத் தேவைக்காக தனது உற்பத்தியில் பெரும் பகுதியை தன்வசம் வைத்துக் கொண்டது.

இவ்வாண்டில் ஒரு கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்வதற்காக ஒன்பது நாடுகளுக்கு தங்கள் பேராளர் குழுவை அனுப்பியுள்ளதாக இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழிலியல் அமைச்சு கடந்த மே 12ஆம் தேதி கூறியிருந்தது.

எனினும், வெப்ப அலையின் தாக்குதலால் கோதுமை உற்பத்தி மே மாத தொடக்கத்தில் பாதிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியளிக்கும் தரவுகளைத் தொடர்ந்து அந்த உணவுப் பொருளை ஏற்றுமதி செய்யும் முடிவை அந்நாடு மாற்றிக் கொண்டது.

உக்ரேன் போர் காரணமாக உணவு மற்றும் எண்ணெய் விலை ஏற்றம் கண்டு எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உயர்வு கண்டதை கடந்த மே 12 ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவுகள் காட்டின.

கடந்த 2014 ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசாங்கம் வீழ்ச்சி கண்டதற்கு அப்போது ஏற்பட்ட பணவீக்கமே காரணமாக இருந்ததை உணர்ந்த மோடி அரசாங்கம் கோதுமை ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்தது.

பணவீக்கம் தொடர்பான தரவுகளால் அச்சமடைந்த அந்நாட்டு அரசாங்கம் கடந்த மே 12 ஆம் தேதி வெளியிட்ட கோதுமை ஏற்றுமதி தொடர்பான அறிவிப்பை மே 13 ஆம் தேதி நள்ளிரவில் மீட்டுக் கொண்டதாக பெயர்க் குறிப்பிட விரும்பாத அரசு வட்டாரம் ஒன்று கூறியது.

உக்ரேன் போர் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று போன்ற காரணங்களால் புதுடில்லி, கோலாலம்பூர், போனஸ்அயர்ஸ், பெல்கிரேட் போன்றவை உணவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளன.


Pengarang :