கிள்ளான் ஜூலை 3 – கிள்ளான் எக்மார் வைண்டம் விடுதியில் ”மலேசிய இந்திய சமுதாயத்தின் மேம்பாடு வடிவமைத்தல்” என்ற கருத்தரங்கத்தின் தீர்மானங்களில் சில வற்றை விரைவாக அமல்படுத்த சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இணக்கம் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூரின் ஒதுக்குப்புற பகுதி இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், ஏழைப் பிள்ளைகளின், சமூக மேம்பாட்டிற்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தினை விரைவில் மாநில அரசே ஏற்று நடத்துவது குறித்து ஆட்சிக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளும் கல்வியில் சிறந்து விளங்க ஆண்டுதோறும் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு வெள்ளி 50 லட்சம் மானியம் வழங்கி வருகிறது.
உயர்கல்வி கூட நுழைவுக்கு அனைத்து டிப்ளோமா மற்றும் டிகிரி மாணவர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் சன்மானமாக வழங்கி வந்த சிலாங்கூர் அரசு, கடந்த சில ஆண்டுகளாக, உயர்கல்விகூட ஏழை இந்திய மாணவர்களின் சிறப்பு உதவியாக தலா 5 ஆயிரம் வரை கல்வி மேம்பாட்டிற்கு வழங்கி வருகிறது.
ஏழை இந்திய மாணவர்களுக்கு உதவும் மற்றொரு மைல்கல் திட்டம், தங்கும் விடுதியின் பராமரிப்பு செலவுக்கு நிதி ஒதுக்க மாநில அரசின் ஆட்சிக்குழு விவாதிக்கும் என்ற அறிவிப்பை பேராளர்களின் பெரும் கைத்தட்டல் களுக்கு இடையே கூறினார்.
விடுதியை கட்ட ரீங்கிட் 40 லட்சம் ஒதுக்கி கட்டித்தந்த மாநில அரசு, தமிழ்ப்பள்ளி வாரியம் எடுத்த முயற்சிகளுக்கு மத்திய அரசின் பதில்கள் சாதகமாக வராததால் இப்பொழுது விடுதி பராமரிப்பு செலவுக்கு மாநில அரசு நிதி ஒதுக்க ஆட்சிக் குழுவின் ஒப்புதலை பெற முனைந்துள்ளார் மந்திரி புசார்.
இந்த திட்டம் நிறைவு பெற்றால், சுதந்திர மலேசிய நாட்டில் 65 ஆண்டு காலமாக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் ஒரு அரசுக்கு இந்திய சமுதாயத்தின் மீது இல்லாத அக்கறையை மாநில அரசான சிலாங்கூர் கொண்டிருப்பது தெளிவாகிறது. சமுதாய மேம்பாட்டு திட்டங்களின் முன்னோடியாக சிலாங்கூர் மாநில அரசு விளங்கி வருவதற்கு இது சிறந்த ஆதாரம் . மக்களின் மேம்பாட்டில் சிலாங்கூர் அரசின் கடப்பாட்டை நிரூபிக்கும் வண்ணம் இது உள்ளது என்றார் கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ். இது முழுக்க மத்திய அரசின் பொறுப்பு ஆனால் ஏழை மக்கள் குழந்தைகள் கல்வி மேம்பாட்டுக்கு உதவ மறுக்கும் மத்திய அரசாங்கத்தின் பிற்போக்கு தனத்தை கண்டிக்கும் வண்ணம், இது அமைகிறது என, கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.