ஜெனிவா, ஜூலை 13- கோவிட்-19 நோய்த் தொற்றும் அதன் பாதிப்பினால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.
அதே சமயம், குரங்கம்மை நோயும் 63 நாடுகளில் உள்ள 9,200 பேருக்கு பரவி பெரும் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறித்தும் தெட்ரோஸ் கிப்ரேய்சுஸ் தனது அச்சத்தை புலப்படுத்தியதாக அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது.
கோவிட்-19 நோய்த் தொற்று மீதான அவசரக் குழு கடந்த வெள்ளிக்கிழமை கூடியது. உலகலாவிய நிலையில் கவலையளிக்கக்கூடிய பொது சுகாதாரத்தின் அச்சுறுத்தலாக அந்த வைரஸ் தொடர்ந்து விளங்கி வருகிறது என அக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
பி.ஏ.4 ம்ற்றும் பி.ஏ.5 போன்ற உருமாற்றம் கண்ட புதிய கோவிட்-19 திரிபுகள் அதிகரித்து உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் மரணமடைவோர் எண்ணிக்கையை அபரிமிதமதமாக உயர்த்தியுள்ளது என்று அவர் சொன்னார்.
நோய்த் தொற்று சோதனை உள்ளிட்ட கண்காணிப்புகள் குறைந்து விட்டன. இதனால் நோய்ப் பரவல் மற்றும் நோய்த் தாக்கத்தின் தன்மை குறித்து அறிந்து கொள்வது சிரமமான பணியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நோய்த் தொற்றுக் கண்டறிவது, சிகிச்சையளிப்பது மற்றும் தடுப்பூசி செலுத்துவது போன்ற நடவடிக்கைகள் ஆக்ககரமான முறையில் மேற்கொள்ளப்படாமலிருப்பதாகவும் அவர் கூறினார்.
வைரஸ் சுதந்திரமாக பரவுகிறது. தங்களின் சக்திக்குட்பட்டு நோயைக் கட்டுப்படுத்துவதில் நாடுகள் ஆக்ககரமாக செயல்படவில்லை என்றார் அவர்.
கடந்த மார்ச் மாதம் உச்சம் தொட்ட கோவிட்-19 நோய்த் தொற்று பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த நான்கு வாரங்களாக மீண்டும் உயர்வு காணத் தொடங்கியுள்ளது.