பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25- சமூக ஊடகங்கள் வாயிலாக சினமூட்டும் மற்றும் பிறரைச் சீண்டிப்பார்க்கும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஆரோக்கியமற்ற இத்தகையச் செயல்களால் சமுதாயம் பிளவுபடும் அபாயம் உள்ளதால் இவை சமய ரீதியாகவும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிறரின் மனதைப் புண்படுத்தும் கலாசாரம் அண்மைய காலமாக வெளிப்படையாகவே நிகழ்ந்து வருகிறது. எதிர்பாரா சம்பவங்களால் துயரத்தில் ஆழ்ந்துள்ளவர்கள் கூட நையாண்டி செய்யப்படுகின்றனர். இந்த செய்கைக்கு ‘ட்ரோல்‘ என பெயரிட்டுள்ளனர் என்றார் அவர்.
கேலியாக செய்யப்படும் அச்செயல்கள் சில வேளைகளில் சரியாகவும் சில வேளைகளில் தவறாகவும் இருக்கலாம். இறுதியில் இது சமூகத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கிவிடும் என்றார் அவர்.
தாமான் டத்தோ ஹருண் ஜூம்ஹூரியா பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பொறுப்புணர்வுமிக்க மற்றும் ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டக்கூடிய சமூகத்தை உருவாக்குவதற்கு ஏதுவாக இத்தகைய கலாசாரங்கள் விரைந்து ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அமிருடின் வலியுறுத்தினார்.