ஷா ஆலம், ஆக 3– மாநிலத்தில் உணவு விநியோக சங்கிலித் தொடர் அமலாக்கம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக உணவு பாதுகாப்பு செயல்குழு அமைக்கப்படும்.
தமது தலைமையிலான இந்த உணவு பாதுகாப்பு செயல்குழுவில் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், பயனீட்டாளர் மற்றும் ஹலால் உணவுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜவாவி அகமது முக்னி ஆகியோர் இடம் பெறுவர் என்று நவீன விவசாயம் மற்றும் அடிப்படை உணவு தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
உணவுத் தொழில் துறை சார்ந்த அரசு இலாகாக்கள், நிறுவனங்கள், விவசாயத் தொழில்துறை, உயர்கல்விக் கூடங்கள் மற்றும் நிபுணத்துவம் சார்ந்த துறைகளின் பிரதிநிதிகள் அந்த செயல்குழுவில் இடம் பெற்றிருப்பர் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் விவசாய உருமாற்றுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள விவசாயம் தொடர்பான துல்லியமான தரவு முறையை உருவாக்குவது, உற்பத்தி அம்சங்களில் கவனம் செலுத்துவது குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று கோல குபு பாரு உறுப்பினர் லீ கீ ஹியோங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த செயல்குழு உணவு, ஆற்றல் மற்றும் விலை அடைவு நிலை மீதும் கவனம் செலுத்தும் என்று இஷாம் சொன்னார்.