ECONOMYNATIONAL

பெருமிதம் தரும் தருணம்- இமயத்தின் உச்சியில் தேசியக் கொடியை நாட்டினார் இளங்கோவன்

கோலாலம்பூர், ஆக 29- உலகின் உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட் மலையில் மலேசிய கொடியை நாட்டி சாதனைப் படைத்துள்ளார் மலேசிய மலையேறும் வீரர் என்.இளங்கோவன்.

அண்மையில் இமயத்தின் உச்சியைத் தொட்டதன் வழி அந்த சாதனையைப் படைத்த அதிக வயது கொண்ட மலேசியராக 64 வயது இளங்கோவன் விளங்குகிறார்.

உறையவைக்கும் குளிர் மற்றும் வேகமாக வீசும் காற்றுக்கு மத்தியில் 8,849 மீட்டர் உயரம் கொண்டு அந்த சிகரத்தின் உச்சியில் சுமார் 10 நிமிட நேரம் தாம் இருந்ததாக அவர் சொன்னார்.

உலகின் மிக உயரமான இடத்தில் இருப்பது போன்ற உணர்வு இந்த இனிய தருணம் எனக்கு ஏற்படுத்தியது. அந்த மலையின் உச்சியில் இருந்துதான் எனது வாழ்வின் மறக்க முடியாத தருணம். ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்கு இணையான சந்தோஷம் இதுவாகும் என்று அவர் மகிழ்ச்சி பொங்க கூறினார்.

இமய மலையின் உச்சியை அடைந்த அதிக வயது கொண்ட மலேசியர் என்ற சாதனைக்காக அவர் பெயர் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இமய மலையின் உச்சியை அடைந்த போது தாம் அதிக களைப்படைந்து விட்டதாக இளங்கோ  என அழைக்கப்படும் இளங்கோவன் தெரிவித்தார்.

இமயத்தின் உச்சியில் காற்றும் குளிரும் அதிகமாக இருந்தது. காதுகளும் அடைத்துக் கொண்டன. இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சில நிமிடங்கள் பிடித்தன என்றார் அவர்.

எவரெஸ்ட் ரவி என அழைக்கப்படும் 57 வயதான டி.ரவிச்ந்திரன் உள்ளிட்ட மூவரடங்கிய மலையேறும் குழுவில் இடம் பெற்றிருந்த இளங்கோவன் கடந்த மே மாதம் 12 ஆம் தேதி  நேப்பாள நேரப்படி காலை 9.17 மணியளவில் இமய மலையின் உச்சியை அடைந்தார்.


Pengarang :