ECONOMYSELANGOR

தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளுக்கு செப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்வீர்

ஷா ஆலம், செப் 6- பலாக்கோங் தொகுதியிலுள்ள வசதி குறைந்தவர்கள் தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை பெறுவதற்கு இம்மாதம் 2 ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

அந்த 100 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகளைப் பெறுவதற்கு முறையான ஆவணங்களுடன் பலாக்கோங் தொகுதி சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்  என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வோங் சியு கீ கூறினார்.

விண்ணப்பதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணையின் அடையாளக் கார்டு நகல், அவர்களில் யாரேனும் இறந்திருக்கும் பட்சத்தில் அவர்களின் இறப்புச் சான்றிதழ் மற்றும் கணவர், மனைவியின் வருமான சான்று ஆகியவையே சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களாகும் என்று அவர் சொன்னார்.

விண்ணப்பதாரர் வாக்காளராகவும் பலாக்கோங் தொகுதியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும், தனிநபர் வருமானம் 1,500 வெள்ளிக்கும் குறைவாக குடும்ப வருமானம் 3,000  வெள்ளிக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பது இதற்கான நிபந்தனைகளாகும் என்று அவர்  தெரிவித்தார்.

குடும்ப உறுப்பினர்கள் யாரும் இத்திட்டத்திற்கு பதிவு செய்திராமல் இருக்க வேண்டும் என்பதோடு வேறு தொகுதிகளில் பற்றுச் சீட்டுகளைப் பெறாதவர்களாகவும் இருத்தல் அவசியம் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம் மற்றும் எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்ட பயனாளிகள் இந்த ஜோம் ஷோப்பிங் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த ஜோம் ஷோப்பிங் திட்டம் தொடர்பான மேல் விபரங்களுக்கு 03-90760331 அல்லது 03-90750331  என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :