ஷா ஆலம், செப் 9– மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டம் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் பெட்டாலிங் வட்டாரத்திலுள்ள இரண்டு இடங்களில் நடைபெறுகிறது.
வரும் சனிக்கிழமை கோத்தா கெமுனிங்கில் உள்ள வெணிலா மண்டபத்திலும் ஞாயிற்றுக்கிழமை சுபாங் ஜெயா, புத்ரா பெர்மாய், ஸ்ரீ கெம்பாங்கான் மாநகர் மன்ற பல்நோக்கு மண்டபத்திலும் இந்த இயக்கம் நடைபெறும்.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற ஆரம்பகால நோய்களைக் கண்டறிய இந்த மருத்துவ பரிசோதனைத் திட்டம் துணை புரிவதாக போது சுகாதார துறைக்கான ஆட்சிக்குழு கூறியது.
நீங்கள் பெட்டாலிங்கிற்கு அருகில் வசிக்கிறீர்கள் என்றால் பட்டியலிடப்பட்டுள்ள இடத்தில் சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் இலவசமாக உடல்நலப் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று டாக்டர் சித்தி மரியா மாமுட் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
அவர் பதிவு முறையையும் பின்வருமாறு பகிர்ந்து கொண்டார்:
1. சேஃப் என்ட்ரி ஸ்டெப்ஸ் (செலங்கா) செயலியை பதிவிறக்கம் செய்யவும்
2. சிலாங்கூர் சாரிங் பட்டனை அழுத்தவும்
3. கேள்வித்தாளை நிரப்பவும்
4. இடம் மற்றும் தேதியைத் தேர்வு செய்யவும்
சிலாங்கூர் சாரிங் திட்ட அமலாக்கத்திற்கு மாநில அரசு 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கியது. நோய்ப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை கடைபிடிப்பவர்களை இலக்காக கொண்ட இந்த மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் வழி 39,000 பேர் பயன்பெறுவர் என எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் தகவலுக்கு https://selangorsaring.selangkah.my/ எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.