ECONOMYSELANGOR

திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களுக்கு வெ.500 நிதியுதவி

ஷா ஆலம், செப் 12– பாங்கி, கம்போங் தெராஸ் ஜெர்னாங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆறு குடும்பத்தினருக்கு சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹாரி தலா 500 வெள்ளியை உடனடி உதவித் தொகையாக வழங்கினார்.

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை ஆய்வு செய்த இரு தினங்களுக்குப் பின்னர் அதாவது கடந்த மாதம் 23 ஆம் தேதி இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த சந்திப்பின் போது அப்பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்களை பாதிக்கப்பட்ட மக்கள் எடுத்துரைத்தனர். அவர்கள் அளித்த புகார்கள் மற்றும் தகவல்களை நாங்கள் கவனத்தில் கொண்டோம்.

இந்த திடீர் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்டத் தரப்பினரின் கவனத்திற்கு இவ்விவகாரத்தைக் கொண்டுச் செல்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற இந்த சந்திப்பின் போது காஜாங் மாவட்ட பெங்குளுவும் உடனிருந்தார். இப்பகுதிக்கான பெங்குளுவாக தாம் நியமிக்கப்பட்டப் பின்னர் ஏற்பட்ட முதல் வெள்ளப் பிரச்னை இதுவாகும் என அவர் சொன்னார்.


Pengarang :