புத்ராஜெயா, செப் 19- அல் அஸார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மலேசிய மாணவர் ஒருவர் எகிப்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதை மலேசிய வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) நேற்று உறுதிப்படுத்தியது.
இந்த கைது தொடர்பில் மேல் விபரங்களைப் பெறுவதற்கு எகிப்திய தலைநகர் கெய்ரோவிலுள்ள மலேசிய தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக விஸ்மா புத்ரா நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
அந்நாட்டிலுள்ள தனது தூதரகம் வாயிலாக விஸ்மா புத்ரா இவ்விவகாரத்தை அணுக்கமாக கண்காணித்து வரும் என்பதோடு அவசியம் ஏற்படும் பட்சத்தில் அந்த மாணவருக்கு ஆலோசக உதவிகளும் நல்கப்படும் என அது தெரிவித்தது.