ECONOMYSELANGOR

விலைவாசி உயர்வின் எதிரொலி- சிக்கனமாக செலவு செய்ய உதவி நிதி பெறுவோருக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், செப் 20– விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு செலவு செய்வதில் விவேகத்தைக் கடைபிடிக்கும் அதே வேளையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும்படி பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்ட பங்கேற்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொருள் விலை தற்போது அபரிமிதமாக உயர்வு கண்டு வருவதால் இ-டொம்பேட் வேவ்பெய் வாயிலாக கணக்கில் சேர்க்கப்படும் மாதம் 300 வெள்ளித் தொகையை அவர்கள் அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.

வசதி குறைந்த மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக மாநில அரசு இந்த உதவித் தொகையை வழங்குகிறது. ஆகவே இந்த தொகையைக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்க வேண்டாம். இதுதவிர இத்திட்ட பங்கேற்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகையை அதே மாதத்திற்குள் செலவிட வேண்டும். மீதமிருக்கும் தொகை அடுத்த மாத கணக்கில் சேர்க்கப்படாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

பிங்காஸ் பங்கேற்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அட்டை ரத்தாவதை தவிர்த்த அதனை தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

ஆண்டுக்கு 3,600 வெள்ளி உதவித் தொகையை வழங்கும் இந்த திட்டத்திற்கு தனது தொகுதியில் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அவர் சொன்னார். மேரு தொகுதியில் 506 பேருக்கு மட்டுமே இந்த உதவித் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 406 பேர் இதன் வழி பயன் பெற்று வருகின்றனர் என்றார்.

இந்த பிங்காஸ் திட்டத்திற்கு தொகுதி நிலையில் வழங்கப்படும் கோட்டா ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. ஆகவே, உண்மையிலே தகுதி பெற்றத் தரப்பினர் மட்டும் இதில் பயன்பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :