ஷா ஆலம், அக் 19- லங்காவியில் வெள்ளப் பிரச்சனை கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இன்று தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடி உள்ளவர்களின் எண்ணிக்கை 61 பேராக அதிகரித்தது.
இன்று காலை 9.30 மணி நிலவரப்படி பாடாங் மாட்சிராட், டேவான் ஷிபாவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த அந்த 61 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக லங்காவி பொது தற்காப்பு பிரிவு அதிகாரி அகமது ஷாபிகிரி டாருஸ் கூறினார்.
நேற்று முதல் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக கம்போங் போஹோர் மஸ்ஜிட்டைச் சேர்ந்த 12 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வெள்ளத்தில் கம்போங் அத்தாஸ் லிம்போங் புத்ரா, பூலோ பென்யும்பிட், புக்கிட் கம்போஜா, போஹோர் மஸ்ஜிட் ஆகிய கிராமங்களும் பாதிக்கப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக லங்காவியில் உள்ள 31 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் சாலைகளிலும் வீடுகள் மீதும் விழுந்து சேதத்தை ஏற்படுத்தின என்றார் அவர்.