ECONOMYNATIONAL

அன்வார் அரசாங்கத்திற்கு தலைமையேற்றால் பிரதமர், அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்படும்

ஈப்போ, அக் 21- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமரானால் பிரதமரின் சம்பளம் மற்றும் அலவன்ஸ் குறைக்கப்படும்.
அதோடு மட்டுமின்றி உயர் நிர்வாகப் பதவியில் உள்ளவர்கள் மற்றும் அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்களின் சம்பளமும் பிடித்தம் செய்யப்படும் என்று பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் கூறினார்.

நீங்கள் அன்வாருக்கு அதிகாரத்தை வழங்கினால் அவர் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வார். மக்கள் சிரமத்தை அனுபவிக்கின்றனர். அன்வார் பிரதமராகும் பட்சத்தில் சம்பளம்  நிச்சயமாக குறைக்கப்படும்.

நான் உங்களுக்கு உத்தரவாதமளிக்கிறேன். இறைவன் அருளால் நவம்பர் 20ஆம் தேதி நான் பிரதமராக நியமனம் பெற்றால் நடப்பு பொருளாதாரச் சூழலைக் கருதி சம்பளம் கூட வாங்க முன்வரமாட்டேன் என்று நேற்றிரவு இங்கு நடைபெற்ற ஹராப்பான் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் சொன்னார்.

மக்கள் ஆதரவளித்து புத்ராஜெயாவை பக்கத்தான் ஹராப்பான் கைப்பற்றினால் அந்த கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் தாமே என்றும் கெஅடிலான் கட்சித் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் கௌரவத்தை உயர்த்துவதற்கும் நாட்டை பொருளாதார சக்தியாக  மாற்றுவதற்கு உதவும் வகையில் இத்தேர்தலில் தாம் தம்புன் தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் சொன்னார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் நவம்பர் 5ஆம் தேதியும் முதல் கட்ட வாக்களிப்பு நவம்பர் 15ஆம் தேதியும் வாக்களிப்பு 19ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Pengarang :