ஷா ஆலம், அக் 21- வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடப்படுவதால் நெடுஞ்சாலைகளில் தினசரி வாகன எண்ணிக்கை 19 லட்சமாக உயரும் என பிளஸ் எனப்படும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை நிறுவனம் எதிர்பார்க்கிறது.
அக்காலக்கட்டத்தில் சாலைகளில் நெரிசல் ஏற்படும் என்பதால் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் படி பொதுமக்களை பிளஸ் நிறுவனத்தின் நடவடிக்கை பிரிவுத் தலைவர் முகமது யூசுப் அப்துல் அஜிஸ் கேட்டுக் கொண்டார்.
பெருந்தொற்றுக்கு பின்னர் பிளஸ் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கமான நாட்களில் 17 லட்சமாக அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார்.
நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனமோட்டிகள் டச் அண்ட் கோ மற்றும் இ-வாலட்டில் போதுமான அளவு பணம் இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில் போக்குவரத்து தொடர்பான ஆக கடைசி நிலவரங்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக பிளஸ் செயலியை பதிவிறக்கம் செய்யும்படியும் அவர் யோசனை தெரிவித்தார்.