ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சாலை விபத்தில் கார் தீப்பற்றியது. பெண் ஓட்டுநர் கருகி மாண்டார்

ஷா ஆலம், அக் 22- மாஜூ விரைவுச் சாலையின் 10.9வது கிலோ மீட்டரில் புக்கிட் ஜாலில் அருகே இன்று விடியற்காலை நிகழ்ந்த விபத்தில் கார் ஒன்று தீக்கிரையானது. இச்சம்பத்தில் அக்காரை ஓட்டிய பெண்மணி கருகி மாண்டார்.

அதிகாலை 6.00 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் அக்காரில் பயணம் செய்த ஆண் பயணி ஒருவர் காயமுற்ற வேளையில் மேலும் மூன்று பெண்கள் உயிர்த்தப்பியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 6.14 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை அதிகாரி கைருடின் அப்துல் ரஹ்மான் கூறினார்.

இதனைத் தொடர்ந்து புக்கிட் ஜாலில் மற்றும் புடு தீயணைப்பு நிலையங்களிலிருந்து 17 தீயணைப்பு வீரர்கள் இரு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.

புரோட்டோன் சாகா காருடன் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த வாகனம் தீப்பற்றியதை தீயணைப்பு வீரர்கள் அறிந்தனர். உடனடியாக தீயை அணைத்த அவர்கள் 100 விழுக்காடு தீக்கிரையான அந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் பெண்மணி ஒருவர் கருகிய நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டனர் என்றார் அவர்.

காரிலிருந்து ஆண் பயணி ஒருவர் தலையில் காயங்களுக்குள்ளான வேளையில் மேலும் மூன்று பெண் பயணிகள் காயமின்றி தப்பினர். இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட புரோட்டோன் சாகா காரின் ஓட்டுநருக்கும் காயம் ஏற்படவில்லை என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

 


Pengarang :