ஷா ஆலம், அக் 25- மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பிரச்சனைகளை அங்கீகாரம் பெற்ற மனநல ஆலோசகரிடம் பகிர்ந்து கொள்ள சிலாங்கூர் மென்டல் சேஹாட் (சேஹாட்) தொலைபேசி சேவை வழி தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வோர் மனநல கோளாறு ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கேட்டுக் கொண்டார். மனச்சோர்வு என்பது ஒரு உணர்வு சம்பந்தப்பட்ட குறைபாடாகும். இதற்கு உரிய சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த நோயினால் வயது, பாலினம் அல்லது இன வேறுபாடின்றி யாரும் பாதிக்கப்படலாம் என அவத் சொன்னார். மனச்சோர்வு பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் வரை நீடிக்கும். ஆகவே, அதை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! சான்றளிக்கப்பட்ட ஆலோசகருடன் உங்கள் மன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார். சேஹாட் ஆலோசகர்களை 1700-82-7536 அல்லது 1700-82-7537 தொலைபேசி எண்களில் மற்றும் செலங்கா செயலி அல்லது http://www.drsitimariah.com/sehat அகப்பக்கம் வாயிலாக நாடலாம்.