ANTARABANGSAECONOMY

வானில் பறக்கும் போது இயந்திரத்தில் தீ- லையன் ஏர் விமானம் அவசரத் தரையிறக்கம்

ஜாகர்த்தா, அக் 27- விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 32வது நிமிடத்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாக லையன் ஏர் நிறுவனத்தின் ஜே.டி.330 விமானம் சோக்கார்னோ-ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.14 மணியளவில் 169 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களுடன்  பலோம்பாங்கிலிருந்து சென் சுமத்ரா நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த தீவிபத்து நிகழ்ந்தது.

அந்த போயிங் 737-800 ரக விமானத்தின் விமானிகள் உடனடியாக அவசர நிலையை அறிவித்ததோடு அவசரத் தரையிறக்கத்திற்கும் அனுமதி கோரினர். பின்னர் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

சுமார் 3,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் இயந்திரம் ஒன்று செயல்படாமல் போனதை  விமானிகள் கண்டு பிடித்ததாக அந்த குறைந்த கட்டண விமான நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த விமானத்தின் இயந்திரத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதை காட்டும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.


Pengarang :