MEDIA STATEMENTSELANGOR

தீவிபத்தில் முதியவர் கருகி மாண்டார்- செரண்டாவில் சம்பவம்

ஷா ஆலம், அக் 30- செரெண்டா, தாமான் டத்தோ ஹருணில் நேற்றிரவு வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் முதியவர் ஒருவர் கருகி மாண்டார்.

பாதிக்கப்பட்டவரின் மகளிடமிருந்து இரவு 10.30 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவரை மேற்கோள் காட்டி ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது .

தனது தந்தையின் வீடு தீப்பற்றி எரிவது தொடர்பில் கணக்காளராக பணிபுரியும் அந்த பெண்ணுக்கு இரவு 10.30 மணியளவில் அவரது நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என சூப்ரிண்டெண்டன் சூஃபியான் அப்துல்லா தெரிவித்தார்.

தீவிபத்து ஏற்பட்டபோது  பாதிக்கப்பட்ட  முதியவர்  படுக்கையறையில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று  சுஃபியன் கூறினார்.

இச்சம்பவத்தில் பலியான 70 வயது முதியவர் தன் சகோதரர் மற்றும் அவரின் மனைவியுடன் வசித்து வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். 

அத்தம்பதியினர் தீபத்தில் தெய்வாதீனமாக உயிர்த் தப்பியதாகவும்  வீடும் உடமைகளும் 80 விழுக்காடு அழிந்ததாகவும்  சுஃபியன் கூறினார்.

Pengarang :