ஷா ஆலம், நவ 1- சமூகப் பணிகளை மேற்கொள்ளும் சங்கங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு (என்.ஜி.ஒ.) உதவ மாநில அரசு 20 லட்சம் வெள்ளிக்கு மேற்பட்ட தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது.
சமூக நல தன்னார்வலர் நிதி, சினர்ஜி பெரிஹாத்தின் திட்டம் மற்றும் புசாட் கெபஜிக்கான் லெஸ்தாரி ஆகிய திட்டங்கள் வாயிலாக இந்த மானியம் வழங்கப்படுவதாக சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
மாநில மேம்பாட்டில் சமூக நலத் திட்டங்களின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ள மாநில அரசு சமூக நல ஆட்சிக்குழுவின் வாயிலாக இந்த உதவிகளை வழங்கி வருகிறது என்று அவர் சொன்னார்.
இன்று இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் சமூக நல மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கணபதிராவ் மானியங்களை ஒப்படைத்தார்.
இந்த நிகழ்வில் புசாட் கெபாஜிக்கான் லெஸ்தாரி திட்டத்தின் கீழ் 17 லட்சம் வெள்ளி தொகையை 51 அமைப்புகள் பெற்றுக் கொண்டன.
இது தவிர சினர்ஜி பெரிஹாத்தின் திட்டத்தின் கீழ் 17 அமைப்புகளுக்கு 240,000 வெள்ளியும் சமூக நல தன்னார்வலர் திட்டத்தின் கீழ் 17 அமைப்புகளுக்கு 90,000 வெள்ளியும் வழங்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில் 27 சமூக நல இல்லங்களும் 150,000 வெள்ளி மானியத்தைப் பெற்றன.