கோம்பாக், நவ 1- டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடும் உழைப்பாளி என்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண்பவர் என்றும் கோம்பாக் தொகுதிவாசிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
மந்திரி பெசார் என்ற முறையிலும் சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் அவர் சிறப்பான சேவை பின்னணியைக் கொண்டுள்ளார் என்று ஓய்வு பெற்ற பணியாளரான ரோஸ்லி பாபா (வயது 66) கூறினார்.
பிரச்னைகளை எதிர்நோக்கும் மக்களுக்கு விரைந்து வந்து தீர்வு காணும் தலைவராக அவர் விளங்குகிறார். இத்தொகுதி மக்களுக்கு அவர் பல வகைகளில் உதவியுள்ளார். இந்த கோம்பாக் தொகுதியில் அவர் போட்டியிடுவது சரியான நடவடிக்கையாகும் என்று ரோஸ்லி சொன்னார்.
இத்தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்கவுள்ள முகமது நிஸாம் ஹலிக் (வயது 23) என்ற இளைஞரும் இதே கருத்தைப் பிரதிபலித்தார். தொகுதி மக்களுக்கு குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அமிருடின் பல்வேறு உதவிகளை நல்கியதாக அவர் குறிப்பிட்டார்.
பெருந்தொற்று பரவல் காலத்தில் மாநில அரசிடமிருந்து உணவுக் கூடைகளை பெற்றவர்களில் நாங்களும் அடங்குவோம். நெருக்கடியான அக்காலக்கட்டத்தில் அந்த உதவி எங்களுக்கு மிகவும் தேவையாக இருந்தது என்றார் அவர்.
அத்தொகுதியைச் சேர்ந்த மற்றொருவர் 31வயது ஜி.சந்திரனும் அமிருடினை பாராட்டிப் பேசினார். மாநில மந்திரி புசாரான அவர் வேலையைக் கண்டு அஞ்சி ஓடுபவரல்ல என்றும் குறிப்பிட்டார்.
அமிருடின் ஷாரியின் அர்ப்பணிப்பு உணர்வை நான் நேரில் கண்டுள்ளேன். பெருந்தொற்று சமயத்தில் நாங்கள் போராடிக் கொண்டிருந்த போது அவர் உணவுப் பொருள்களை விநியோகம் செய்ததோடு அனைவரும் கோவிட்-19 சோதனையை மேற்கொள்வதை உறுதி செய்தார் என சந்திரன் தெரிவித்தார்.
கோம்பாக் தொகுதியில் சேவையாற்றுவதற்கு தகுதியான வேட்பாளர் அமிருடினே எனக் கூறிய சந்திரன், வரும் பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக சொன்னார்.