ஜோர்ஜ் டவுன், நவ 8– விரைவில் நடைபெறவிருக்கும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் இளம் வாக்காளர்களைக் கவர்வதற்கு அரசியல் மறுஅடையாள அம்சத்தை சிறப்பாக கையாளக்கூடியவர்களாக வேட்பாளர்கள் இருப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இளம் தலைமுறையினரில் பலர் மதில்மேல் வாக்காளர்களாக இன்னும் உள்ளதாக மலேசிய அறிவியல் பல்கலைக்கழக சமூக அறிவியல் ஆய்வியல் துறையின் சமூகவியல் அரசியல் விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் சிவசண்முகம் பாண்டியன் கூறினார்.
அவர்கள் வாக்களிப்பதிலிருந்து விலகியிருப்பதற்கான சாத்தியமும் உள்ளது. இருப்பினும் அரசியல் கட்சிகளின் பிரசார கருவியாக செயல்படக் கூடிய வகையில் தங்களுக்கென்ற அடையாள முத்திரையைக் கொண்ட மற்றும் மற்றவர்கள் முன்மாதிரியாக கொள்ளக்கூடிய பண்புகள் நிறைந்த வேட்பாளர்கள் இருப்பின் அவர்களுக்கு ஆதரவளிக்க இளம் வாக்காளர்கள் தயாராக இருப்பர் என அவர் தெரிவித்தார்.
இளம் தலைமுறையினர் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடிய சமூகவியல் முகவர்களாக சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களே விளங்க முடியும் என்று அண்மையில் பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநிலத்திலுள்ள பதிவு பெற்ற 12 லட்சம் வாக்காளர்களில் 68,000 பேர் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பதை தேர்தல் ஆணையத்தின் தரவுகள் காட்டுகின்றன.