கோல லங்காட், நவ 16– ஒரு சில தலைவர்களின் துரோகத்தால் களங்கமடைந்த வாக்காளர்களின் கௌரவத்தை மீட்டெடுப்பதற்கு இந்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களிக்கும்படி நாட்டு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
புத்ரா ஜெயாவை ஆட்சி புரியும் வாய்ப்பு கிடைத்தால் இன,வயது வேறுபாடின்றி அனைத்து மக்களின் நலன் காக்கப்படுவதை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி உறுதி செய்யும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நீங்கள் அனைவரும் போராளிகள். மேல் மட்ட மக்களுக்காக அல்லாமல் அடித்தட்டு மக்களுக்காக போராடுவது புதிய அரசாங்கத்தின், புதிய பிரதமரின் கடமையாகும் என்று அவர் சொன்னார்.
ஆகவே, அனைத்து துரோகிகளையும் நிராகரிப்பதற்கு நவம்பர் 19 ஆம் தேதியை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மலாய்க்காரர், சீனர், இந்தியர் என்ற கேள்வி எழுவதற்கு இது தருணமல்ல. அனைத்து இனங்களுக்கும் பாதுகாப்பான நாடாக மலேசியாவை உருவாக்க நாம் விரும்புகிறோம். நான் தலைவரானால் அனைத்து இனங்களையும் எனது குடும்பமாக பார்ப்பேன் என்றார் அவர்.
கோல லங்காட் தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அன்வார், பக்கத்தான் ஹராப்பான் சார்பில் இத்தொகுதியில் போட்டியிடும் மணிவண்ணன் கோவின் வெற்றியடைய உதவுமாறு வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.