ECONOMYNATIONAL

பாடாங் செராய் ஹராப்பான் வேட்பாளர் கருப்பையா காலமானார்

ஷா ஆலம், நவ 16- பாடாங் செராய் தொகுதி ஹராப்பான் வேட்பாளர் எம்.கருப்பையா இன்று காலமானார். கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி ஃபாட்சில் இதனை உறுதிப்படுத்தினார்.

அவரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேல் விபரங்களுக்கு காத்திருக்கிறோம் என்று அவர் சொன்னார்.

கருப்பையாவின் மரணம் கெஅடிலான் கட்சிக்கு பெரும் இழப்பாகும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில் கூறினார். 

இதனிடையே, கருப்பையா இன்று பிற்பகல் 2.27 மணியளவில் கூலிம் மருத்துவமனையில் காலமானதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ரெட்சுவான் சாலே தெரிவித்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆகக் கடைசி நிலவரங்களை பின்னர் அறிவிக்கிறோம் என அவர் சொன்னார்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில்  பாடாங் செராய் தொகுதியில் போட்டியிட்டு வென்ற 69 வயதான கருப்பையா, இம்முறை அத்தொகுதியை தக்க வைத்துக் கொள்ள களம் இறங்கியிருந்தார். இவர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொகுதியில் அவர் ஆறு முனைப் போட்டியை எதிர்நோக்கியிருந்தார். தேசிய முன்னணி சார்பில் சி. சிவராஜ், பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் அஸ்மான் நசாருடின், பெஜூவாங் சார்பில் ஹம்சா அப்துல் ரஹ்மான் மற்றும் சுயேச்சையான ஸ்ரீநந்தா ராவ் ஆகியோர் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.


Pengarang :