ஷா ஆலம், நவ 22- இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி இன்று வரை பெர்மாத்தாங் தொகுதியில் நடத்தப்பட்ட மலிவு விற்பனைத் திட்டங்கள் வழி அத்தொகுதியைச் சேர்ந்த 20,000 பயனடைந்துள்ளனர்.
தொகுதியின் 17 இடங்களில் நடத்தப்பட்ட இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தின் மூலம் சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை தொகுதி மக்கள் பெற்றதாக சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த விற்பனைத் திட்டத்தில் கோழி, இறைச்சி, மீன், முட்டை அரசி, சமையல் எண்ணெய் போன்ற பொருள்களை குறைவான விலையில் விற்கப்பட்டன என்று அவர் சொன்னார்.
இந்த விற்பனைத் திட்டத்தை பொது மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இத்திட்டம் மூலம் செலவினத்தைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் புதிய பொருள்களையும் வாங்க முடிகிறது என அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு நடைபெற்ற பெர்மாத்தாங் தொகுதி நிலையிலான மலிவு விற்பனையின் போது அவர் இதனை தெரிவித்தார்.