ஷா ஆலம், டிச 12- திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக சிறப்பு பணிக்குழுவை பண்டமாரான் தொகுதி உருவாக்கியுள்ளது. இப்பணிக்குழு உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பம்ப் சாதனம் மூலம் வெள்ள நீரை வெளியேற்ற உதவுவார்கள் என்று தொகுதி உறுப்பினர் தக் சீ லியோங் கூறினார். பாண்டமாரான் தொகுதியில் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் பல இடங்கள் உள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஒரு பணிக்குழுவை ஏற்பாடு செய்ய நானே முயற்சி எடுத்தேன் என்று அவர் சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார். அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் தாமான் மெலாவிஸ் பகுதியில் நீர் இறைக்கும் இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வெள்ள நீர் சேகரிப்பு குளங்களை உருவாக்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார். இப்பகுதியில் வெள்ளத் தடுப்பு மற்றும் வடிகால்களை தரம் உயர்த்தும் பணி 1கோடியே 60 லட்சம் வெள்ளி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இப்பணிகள் வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். இத்திட்டம் பூர்த்தியாகும் வரை கால்வாய்கள் மற்றும் நீரோடைகளை துப்புரவு செய்வதில் கிள்ளான் நகராண்மைக் கழகம், வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளதாக அவர் கூறினார். தொடர்ச்சியான அடைமழை காரணமாக பெட்டாலிங், கிள்ளான் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை எச்சரித்துள்ளது.