கோலாலம்பூர், டிச 16- இன்று காலை 9.15 மணி நிலவரப்படி ஜாலான் கெந்திங்-பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவத்தில் எண்மர் உயிரிழந்தது உறுதி செய்யப் பட்டுள்ளதோடு மேலும் 60 பேர் காப்பாற்றப் பட்டுள்ளனர்.
மீட்கப் பட்டவர்களில் ஒரு பெண்மணியும் இரு சிறார்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் துறையின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
எனினும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அவர் கூறினார். இச்சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 68 ஆகப் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.
கோதோங் போலீஸ் நிலையம் இன்று காலை 7.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி சம்பவ இடத்திலிருந்து 36 பேர் மீட்கப்பட்டு உலு யாம் பாரு போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் உயிரிழந்தவர்களின் உடல் சவப் பரிசோதனைக்காக கோல குபு பாரு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் சொன்னார்.
இன்று விடியற்காலை நிகழ்ந்த அச்சம்பவத்தில் இயற்கை விவசாயப் பண்ணை அருகே கூடாரம் இட்டு தங்கியிருந்த சுமார் 100 பேர் இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டதாக தொடக்க கட்ட தகவல்கள் கூறின.