ஷா ஆலம், ஜன 7- நாட்டில் நேற்று புதிதாக 543 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் நான்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டது.
கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய நான்கு மரணச் சம்பவங்கள் நேற்று பதிவானதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது. அவற்றில் ஒன்று மருத்துவமனைக்கு வெளியே பதிவான மரணமாகும் என அது தெரிவித்தது.
நேற்று பதிவான மரணங்களுடன் சேர்ந்து கோவிட்-19 நோய்க்கு பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை 36,870 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி நாட்டில் 11,415 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிர தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 10,828 பேர் அல்லது 94.9 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள வேளையில் 554 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 33 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் வேளையில் 14 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
நேற்று 688 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டனர். இதனுடன் சேர்த்து இந்த நோயிலிருந்து விடு பட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 81 ஆயிரத்து 052 ஆக உயர்ந்துள்ளது.