கோல திரங்கானு, ஜன 12- மேன்மை தங்கிய திரங்கானு சுல்தான் சுல்தான் மிஸான் ஜைனால் அபிடினை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இஸ்தானா ஷர்ஹியாவில் சந்தித்தார்.
அன்வார் பயணம் செய்த வாகனம் காலை 10.27 மணியளவில் அரண்மனை வளாகத்தில் நுழைந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அவ்வாகனம் அங்கிருந்து வெளியேறியது.
பக்கத்தான் ஹராப்பான் தலைவரும் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் நாட்டின் பத்தாவது பிரதமராக கடந்தாண்டு நவம்பர் 24ஆம் தேதி பதவியேற்றப் பிறகு சுல்தான் மிஸானுடன் நடத்தும் முதல் சந்திப்பு இதுவாகும்.
சுல்தானுடனான சந்திப்புக்குப் பிறகு மலேசிய திரங்கானு பல்கலைக்கழகத்தின் செனட் மண்டபத்தில் மாநிலத்திலுள்ள கூட்டரசு துறைகளின் தலைவர்களுடன் அன்வார் சந்திப்பு நடத்தவுள்ளார்.