ஈப்போ, ஜனவரி 14: கம்பார் சாஹோமில் உள்ள தற்காலிக தங்கும் மையத்திற்கு (பிபிஎஸ்) மாற்றப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 94 பேராக அதிகரித்துள்ளது.
தங்களுடைய வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து நேற்று இரவு 8 மணி நிலவரப்படி மொத்தம் 24 குடும்பங்கள் தற்காலிக தங்கும் மையத்தில் (பிபிஎஸ்) சாஹோமில் அடைக்கலம் பெற்றுள்ளதாக பேராக் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBN) செயலகம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் பிற்பகலில் பெய்த கனமழையால் கிராமம் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு முதல் பிபிஎஸ் எஸ்கே சாஹோம் திறக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள சுங்கை ரியாஸின் நீர்மட்டம் உயர்ந்ததால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு கிராமத்தில் பல வீடுகள் பாதிக்கப் பட்டன.
மேலும், லாரூட் மாதங், செலாமா மற்றும் உலு பேராக்கில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
– பெர்னாமா