ஷா ஆலம், மார்ச் 4- ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கிலான கித்தா சிலாங்கூர் உதவித் திட்ட பணிக்குழு இன்று அம்மாநிலத்திற்கு பயணமாகும்.
இந்த முதல் கட்டப் பயணத்தின் போது உணவு மற்றும் தூய்மை உபகரணங்கள் அடங்கிய உதவிப் பொருள்கள் மூவரில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஜோகூர் மாநிலத்தின் பெரும்பகுதியைச் சூழந்துள்ள வெள்ளத்தை கருத்தில் கொண்டு அந்த மாநிலத்திற்கு கித்தா சிலாங்கூர் உதவி பணிக்குழுவை அனுப்ப மாநில ஆட்சிக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
இந்த இயற்கையின் சோதனையிலிருந்து மீண்டு வருவதற்கான மன வலிமையை ஜோகூர் மாநில மக்கள் பெற தாம் இறைவனை இறைஞ்சுவதாக அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மிக மோசமான வெள்ளம் காரணமாக ஜோகூர் மாநிலத்தில் நேற்று மாலை 4.00 மணி வரை 219 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு 32,870 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.