MEDIA STATEMENT

கதவுகள் தானாக பூட்டிக் கொண்டதால் காரில் இரு சிறார்கள் சிக்கினர்

கோலாலம்பூர், மார்ச் 17- காரின் கதவு தானாக பூட்டிக்கொண்ட காரணத்தால் இரு சிறார்கள் சுமார் அரை மணி நேரம் காரினுள் சிக்கிக் கொண்டனர்.

இச்சம்பவம், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ், பெர்சியாரான் புத்ரா இண்டாவில் நேற்று மாலை நிகழ்ந்த தாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் மோர்னி மாமாட் கூறினார்.

 கதவு தானாக பூட்டிக் கொண்ட காரினுள் நான்கு வயதுச் சிறுவனும் 16 மாதக் குழந்தையும் சிக்கிக் கொண்டதாக நேற்று மாலை 3.30 மணியளவில் தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து சுபாங் ஜெயா தீயணைப்பு நிலையத்திலிருந்து குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது பூட்டப்பட்ட காரில் இரு சிறார்கள் சிக்கிக் கொண்டிருப்பதை  தீயணைப்பு வீரர்கள் கண்டனர். எனினும், சம்பந்தப்பட்ட சிறார்களின் குடும்பத்தினர் மாற்று சாவியைக் கொண்டு காரைத் திறந்து அக்குழந்தைகளை மீட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த காரின் “ஆட்டோ லாக்“ எனப்படும் தானியங்கி பூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது தானாக பூட்டிக் கொண்டிருக்கலாம் என நம்பப்படுவதாக கூறிய அவர், இச்சம்பவத்தில் அக்குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.


Pengarang :