சென்னை, ஏப் 1- மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் இந்தியாவுக்கு பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டு நேற்று சென்னை சென்று சேர்ந்தார். சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை மற்றும் புதுடில்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் சிவகுமார் பங்கேற்கிறார். மனித வள அமைச்சின் டேலண்ட் கோர்ப் (Talent Corp) நிறுவனம் மற்றும் சென்னை தொழில் திறன் பயிற்சி நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் கையெழுத்து ஒப்பந்த சடங்கிற்கு சிவகுமார் தலைமையேற்கிறார்.
பின்னர் புதுடில்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இந்திய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்திய அரசின் அழைப்பை ஏற்று நேற்றிரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு பொன்னாடைகள் மற்றும் ஆளுயுர ரோஜாப்பூ மாலை மாலை அணிவிக்கப்பட்டது. மனித வள அமைச்சின் துணை நிர்வாக இயக்குனர் டத்தோ ரஸ்மான், டத்தோ பூத்தே, சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ அஸ்மான், அரசியல் செயலாளர் ரவீந்திரன், சிறப்பு செயலாளர் சுகுமாரன் சுப்பிரமணியம், தனிச் செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளனர்.