ECONOMYPENDIDIKAN

மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் புதிய பள்ளிகளை நிர்மாணிக்க இடம் ஒதுக்கீடு-மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஏப் 4- மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் குறிப்பாக ஷா ஆலமில் குறைந்தது ஐந்து புதிய பள்ளிகளைக் நிர்மாணிப்பதற்கான இடங்களை  மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

மேலும், புதிய பள்ளிகளை நிர்மாணிப்பதில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் கோத்தா கெமுனிங், கிள்ளான், யுகே பெர்டானா, புக்கிட் அந்தாராபங்சா, கோல லங்காட் போன்ற பகுதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எனினும், தற்போது மோசமான நிலையில் உள்ள பள்ளிகளை சீரமைப்பதில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வரும் கல்வி அமைச்சின் முடிவுக்கு தாங்கள் காத்திருப்பதாக அவர் சொன்னார்.

மோசமான நிலையில் உள்ள பள்ளிகளை சீரமைப்பதில் கல்வியமைச்சு தற்போது கவனம் செலுத்தி வருகிறது. 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இவ்விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இருந்த போதிலும் கல்வியமைச்சு தரப்பினரை தாம் சந்தித்த போது சிலாங்கூரில் மேலும் அதிக பள்ளிகளை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசு தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் சிலாங்கூர் மாநில நில மற்றும் கனிம வள இலாகாவில் ஓ.எஸ்.சி. எனப்படும் ஓரிட மையம் மற்றும் ரொக்கமில்லா தினத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மோசமான உள்ள 380 பள்ளிகளை சீரமைப்பதற்கு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 92 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியது.


Pengarang :