கோம்பாக், ஏப் 9- நோன்புப் பெருநாளை கொண்டாடும் சமயத்தில் பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடக்கும்படி பொது மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான நோய்க்கான அறிகுறி காணப்படும் பட்சத்தில் அந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக பொது மக்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்தாண்டுகளைப் போல் நடமாட்டக் கட்டுப்பாடு போன்ற நெருக்குதல்கள் இல்லாத காரணத்தால் இவ்வாண்டு நோன்புப் பெருநாள், பொருள் பொதிந்ததாக விளங்குகிறது.
கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நம்மால் எதுவும் செய்ய இயலவில்லை. இவ்வாண்டில் நாம் அனைவரும் ஒன்று கூடி பெருநாளை கொண்டாட விருக்கிறோம். எனினும், நாம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என வலியுறுத்த விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக மண்டபத்தில் நடைபெற்ற உலு கிளாங் தொகுதி நிலையிலான நோன்புப் பெருநாள் உதவிப் பொருள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உலு கிளாங் தவிர்த்து, தாமான் ஸ்ரீ கோம்பாக் டேவான் பெரிங்கினில் நடைபெற்ற கோம்பாக் செத்தியா தொகுதி நிலையிலான நோன்புப் பெருநாள் உதவிப் பொருள்களும் வழங்கும் நிகழ்வுக்கும் அமிருடின் தலைமை தாங்கினார்.