கோலாலம்பூர், ஏப் 15- நோன்புப் பெருநாளின் போது சாலைகளில் வாகனப்
போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்ய அரச மலேசிய போலீஸ்
படை “ஓப் லஞ்சார்“ இயக்கத்தை வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி
அமல்படுத்த விருக்கிறது.
வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நெடுஞ்சாலைகளில்
நெரிசல் ஏற்படக்கூடியை இடங்கள் மீது கவனம் செலுத்துவதை இந்த “ஓப்
லஞ்சார்“ இயக்கம் நோக்கமாக கொண்டுள்ளது என்று தேசிய போலீஸ்
படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.
சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக களத்தில் இருக்கும் போலீஸ்
உறுப்பினர்கள், ரோந்துக் கார்கள், ரோந்து மோட்டார் சைக்கிள், உளவுப்
பிரிவு, சோதனைச் சாவடிப் பிரிவு மற்றும் ரேலா உறுப்பினர்களின் பணி
ஒருமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகள், மாநிலச் சாலைகள் மற்றும் ஊராட்சி மன்றச்
சாலைகளில் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக
பணிகளை ஒருமுகப்படுத்தும் நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்படும்
என்றார் அவர்.
இதனிடையே, 20வது “ஓப் செலாமாட்“ இயக்கம் வரும் ஏப்ரல் 20 முதல் 27
வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று அக்ரில் சானி குறிப்பிட்டார்.
சீரான வாகனப் போக்குவரத்தை உறுதி செய்வது, விபத்துகளின்
எண்ணிக்கையைக் குறைப்பது, சொத்துகளை பாதுகாப்பது, வீடு புகுந்து
திருடுவது போன்ற குற்றச் செயல்களைத் தடுப்பது ஆகியவற்றை இந்த
ஓப் செலாமாட் இயக்கம் இலக்காக கொண்டுள்ளது என்று அவர் மேலும்
சொன்னார்.