சிரம்பான், ஏப் 24- நோன்புப் பெருநாளை முன்னிட்டு இந்திய குடும்பம்
போர்ட்டிக்சன் கடற்கரைக்கு மேற்கொண்ட உல்லாசப் பயணம் துயரத்தில்
முடிந்தது. நேற்று மாலை, பந்தாய் சஹாயா கடற்கரையில் ஆனந்தமாக
குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரில் மூவர்
நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பந்திங்கைச் சேர்ந்த அந்த மூன்று சகோதரிகளும் தன் தம்பி மற்றும்
பேராக்கைச் சேர்ந்த உறவினருடன் கடற்கரையில் குளிப்பதற்காக
போர்ட்டிக்சன் வந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக தெலுக்
கெமாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி ஆணையர் அஸிசி
அலியாஸ் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5.57 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து போர்ட்டிக்சன் மற்றும் தெலுக் கெமாங்
தீயணைப்பு நிலையங்களிலிருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு
விரைந்ததாக அவர் சொன்னார்.
அந்த மூன்று சகோதரிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த
வேளையில் இதர இருவரையும் பொது மக்கள் மீட்டு
மருத்துவமனையில் சேர்த்ததாக அவர் தெரிவித்தார்.
அம்மூவரின் உடல்களும் கரையிலிருந்து 50 மீட்டர் தொலைவில்
கண்டுபிடிக்கப்பட்டன. இச்சம்பவம் நிகழ்ந்த போது நீர் பெருக்கு
ஏற்பட்டிருந்ததோடு கடலும் கொந்தளிப்பாக காணப்பட்டது. அப்பகுதி
குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதி என தங்களிடம் தெரிவிக்கப்பட்டது
என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.