ANTARABANGSAMEDIA STATEMENT

துருக்கி தேர்தலில் எர்டோகன் வெற்றி – பிரதமர் அன்வார் வாழ்த்து

கோலாலம்பூர், மே 29– துருக்கியில் நேற்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதன் அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகனுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியின் வழி இரு நாடுகளுக்கும் இடையிலான இரு வழி உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அன்வார் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற துருக்கிய குடியரசு அதிபர் தேர்தலில் 13 வது அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் எர்டோகனுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்களில் துருக்கி தொடர்ந்து முக்கிய பங்கினை ஆற்றி வரும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர்  தேர்தலில் தனது போட்டியாளரான கமீல் கிளிக்டாரோக்ளுவை தோற்கடித்து எர்டோகன் மீண்டும் அதிபராக  வெற்றி பெற்றுள்ளதாக துருக்கி தேர்தல் மன்றத்தின் தலைவர் அகமட் யனேர் அறிவித்தார்.

இந்த தேர்தலில் எர்டோகனுக்கு 52.14 விழுக்காடு வாக்குகள் கிடைத்த வேளையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கமீல் 47.86 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார்.


Pengarang :