ஷா ஆலம், ஜூன் 27- பத்து தீகா தொகுதியில் அடுத்த மாதம் நான்கு இடங்களில் மாநில அரசின் அத்தியாவசிய உணவுப் பொருள் மலிவு விற்பனை நடைபெறவுள்ளது.
இந்த மலிவு விற்பனை செக்சன் 16,17,19 மற்றும் 24 ஆகிய இடங்களில் நடைபெறும் என்று எட்டாவது பிராந்தியத்திற்கான ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் சித்தி நுர் ஆயிஷா முகமது ஜைன் கூறினார்.
பத்து தீகா தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாக நடத்தி வந்த காரணத்தால் கடந்தாண்டைப் போல் இவ்வாண்டு இங்கு அதிகமான மலிவு விற்பனைகளை ஏற்பாடு செய்ய முடியாமல் போனதாக அவர் சொன்னார்.
எனினும், வரும் ஜூலை மாதத்தில் இத்தொகுதியின் நான்கு இடங்களில் மலிவு விற்பனைகளை நடத்தவுள்ளோம். இந்த விற்பனை நடைபெறும் இடங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இதில் பொது மக்கள் கலந்து பயன் பெறும்படி கேட்டுக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான இந்த மலிவு விற்பனை கடந்தாண்டு தொடங்கியது முதல் பொதுமக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
வேறு ஒரு இடத்தில் நடைபெறவிருந்த மலிவு விற்பனை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் இன்று இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்ற செங்கால் மண்டபத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
முன்பு ஜெலாஜா ஏசான் ராக்யாட் எனும் பெயரில் மாநில அரசு நடத்தி வந்த இந்த மலிவு விற்பனை தற்போது உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்கைச் செலவின அமைச்சின் ஒத்துழைப்புடன் ஜூவாலான் ஏசான் ரஹ்மா எனும் பெயரில் நடைபெற்று வருகிறது.