கோம்பாக், ஆக 3- வட்டாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் முழு ஈடுபாடு காட்டி வரும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என கம்போங் நக்கோடா குடியிருப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலாக இழுபறியாக இருந்து வந்த நில உரிமைப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டது மந்திரி புசாருமான அமிருடினின் மகத்தான சாதனைகளில் ஒன்றாகும் என்று முகமது ஜூல்ஹசுவான் அவாங் (வயது 39) கூறினார்.
எங்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கவிருப்பதாக மந்திரி புசார் எங்களிடம் தெரிவிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் மாறினால் யார் எங்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என்று அவர் கேள்வியெழுப்பினார்.
தாம் சிறிய அளவில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தனக்கு குளிர்பதனப் பெட்டியை ஓராண்டிற்கு முன்னர் அமிருடின் வழங்கியதை தாம் இன்னும் மறக்கவில்லை என்று ஜூல்கிப்ளி ஙா அகமது (வயது 68) கூறினார்.
அந்த குளிர்பதனப் பெட்டி எனகுக் பேருதவியாக உள்ளது. அவர் அடிக்கடி எனது கடைக்கு வருவார். அவர் தொடர்ந்து மந்திரி புசாராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நீடிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என அவர் குறிப்பிட்டார்.
அவரின் தோற்றமும் மிகவும் கனிவானது. மக்கள் அவரை எளிதில் அணுகி தங்கள் பிரச்சனைகளை முன்வைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வரும் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் சுங்கை துவா தொகுதியில் அமிருடின் மும்முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார். பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் ஹனிப் ஜமாலுடின் மற்றும் சுயேச்சை வேட்பாளரான சுமன் கோபால் ஆகியோர் இங்கு போட்டியிடுகின்றனர்.