கோலாலம்பூர், செப் 22- மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவின் மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
மித்ரா எனப்படும் அந்த உருமாற்ற பிரிவின் செயல் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளக்கூடிய மற்றும் அதன் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறக்கூடிய தளமாக இந்த ஓரிட மையம் விளங்க முடியும் என்று கெடிலான் கட்சியின் கோத்தா ராஜா தொகுதித் தலைவருமான அவர் தெரிவித்தார்.
மித்ராவின் ஓரிட மையங்கள் நாடு முழுவதும் அமைப்பதற்கான எனது பரிந்துரையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்பதோடு இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தேவையான வளங்களையும் தயார் செய்யும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் சொன்னார்.
இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்தை மேன்மையுறச் செய்வதற்கும் வலுப்படுத்துவதற்கும் நிறைய பங்காற்ற முடியும் என்று குணராஜ் அறிக்கை ஒன்றில் தெரிலித்தார்.
2023 பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 கோடி வெள்ளி நிதியை முழுமையாக மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்திய மித்ராவுக்கும் அதன் அர்ப்பண உணர்வு கொண்ட தலைவர் டத்தோ ரமணனுக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பி.கே.ஆர். கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான ரமணனனை மித்ரா சிறப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவராக நியமித்ததன் மூலம் பிரதமர் அன்வார் மிச்சிறப்பான முடிவை எடுத்துள்ளார் என அவர் தெரிவித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் அமைக்கப்ட்ட மித்ரா பிரிவு, டத்தோ ரமணன் தலைமையில் புத்துயிர் பெற்றுள்ளதாகக் கூறிய அவர், நிதியைப் பகிர்ந்தளிப்பதில் மித்ரா கடைபிடித்த வெளிப்படைத்தன்மை அரசாஙக நிதியைப் பயன்படுத்தும் விஷயத்தில் புதிய அளவுகோளை உருவாக்கியுள்ளது என்றார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 10 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.
மித்ராவின் கீழ் ஒதுக்கப்பட்ட இந்நிதியை கண்காணிப்பதற்காக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ரமணன் தலைமையில் சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது.
டத்தோ ரமணன் தலைமையில் மிகவும் ஆக்ககரமான முறையில் செயல்படும் இந்த மித்ரா உருமாற்றப் பிரிவு, இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்ட இந்நிதியை பல்வேறு நலத்திட்டங்களுக்காக முழுமையாக பயன்படுத்தியுள்ளது.
மித்ரா வரலாற்றில் இந்நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். குறிப்பாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மித்ராவின் வாயிலாக இவ்வாண்டு பயனடையவுள்ளனர்.
அதே வேளையில் மித்ரா நிதி பயன்பாடு வெளித்தன்மையுடனும் வெளிப்படையாக இருப்பதும் பாராட்டுக்குரியது என குணராஜ் குறிப்பிட்டார்.