ஈப்போ, செப் 24 – இங்குள்ள சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி அரங்கில் நேற்று நடைபெற்ற 2023 தேசிய போலீஸ் படைத் தலைவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் சிலாங்கூர் போலீஸ் படை மற்றும் கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையம் (புலாபோல்) ஆகியவை கூட்டு-சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.
பிரீமியர் பிரிவின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் 2 – 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்த போது பலத்த மழை காரணமாக விளையாட முடியாத அளவுக்கு திடல் மோசமான நிலையில் இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதனால் வேறு வழியின்றி இரு அணிகளையும் கூட்டு வெற்றியாளர்களாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். கோலாலம்பூர் மற்றும் ஜோகூர் அணிகள் மூன்றாம் இடத்திற்கான கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன.
முதலாம் பிரிவுக்கான போட்டியில் சபா போலீஸ் குழு சாம்பியன் ஆனது. மூன்றாவது இடத்தை மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் குழுக்கள் பகிர்ந்து கொண்டன.
இந்த வருட சாம்பியன்ஷிப் போட்டியில் பிரீமியர் பிரிவில் எட்டு அணிகளும் பிரிவு ஒன்றில் 11அணிகளும் போட்டியிட்டன.
புக்கிட் அமான் சிறப்புப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.