SELANGOR

செகி ஃப்ரெஷ் பேரங்காடியின் நான்கு கிளைகளில் நாளை ஏஹ்சான் ரஹ்மா விற்பனை

ஷா ஆலம், செப் 29- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்
(பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை நாளை
சனிக்கிழமை மேலும் நான்கு செகி ஃப்ரெஷ் பேராங்காடி கிளைகளின்
ஆதரவுடன் நடைபெறவுள்ளது.

கோல குபு பாரு, பூலாவ் இண்டா, சுங்கை ஊடாங் மற்றும் தெலுக்
பங்ளிமா காராங் ஆகிய நான்கு கிளைகளில் நடைபெறும் இந்த மலிவு
விற்பனையில் சுற்றுவட்டார மக்கள் கலந்து தரமானப் பொருள்களை
மலிவான விலையில் வாங்கிச் செல்லும்படி கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.

உதவி தேவைப்படுவோருக்கு குறிப்பாக பொருள் விலை அதிகரிப்பால்
சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் தரப்பினருக்கு உதவும் நோக்கில் இந்த
திட்டத்தை நாங்கள் அமல்படுத்தி வருகிறோம் என செகி ஃப்ரெஷ்
பேராங்காடி தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

கடந்த ஆகஸ்டு மாதம் மாநில அரசினால் ஆரம்பிக்கப்பட்ட மலிவு
விற்பனையின் வாயிலாக அதிகமானோர் பயன் பெறுவதற்காக மாநில
அரசு செகி ஃப்ரெஷ் பேரங்காடி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுள்ளது.

ஜூவாலான் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையின் விவேகப்
பங்காளியாகவும் இந்த நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. அதோடு
மாநிலத்திலுள்ள 55 கிளைகளை மலிவு விற்பனை மையமாக
செயல்படுத்தவும் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக இணக்கம்
காணப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு
பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு முட்டை 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் கெம்போங் மீன் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய்
25.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :