ஷா ஆலம், அக் 14- நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2024 பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சரக்கு போக்குவரத்து மற்றும் துறைமுகங்களை வலுப்படுத்தும் திட்டத்தின் வழி கிடைக்கும் பலன்களை மாநில அரசு பயன்படுத்திக் கொள்ளும்
அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்தின் வாயிலாக தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளை மாநில அரசு மேலும் விரிவாக விவரிக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தென்கிழக்காசியாவின் சக்தி வாய்ந்த பொருளாதார நாடாகவும் வரும் 2030ஆம் ஆண்டிற்குள் உலகின் 30 தலைசிறந்த பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாகவும் மலேசியாவை உருவாக்கும் நோக்கத்திற்கு மாநில அரசு துணை நிற்கும் என்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
மலேசியா நிறுவனங்களுடன் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடனும் போட்டியிடும் ஆற்றலைக் கொண்டிருக்கும் வகையில் குறு நிறுவனங்களோடு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் ஆதரவளிப்பதற்கான பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் சொன்னார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பட்ஜெட் உரை தொடர்பில் வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் விவாதத்தின் போது தாம் விரிவாக எடுத்துரைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.