கோலாலம்பூர், அக் 26- கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்படும் இரயில் சேவைகளில் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் திறந்த கட்டண வசூலிப்பு முறை முழுமையாக அமல்படுத்தப்படும். இதன் மூலம் பயணிகளுக்கு கூடுதல் விருப்பத்தேர்வுகள் கிடைக்கும் என்று மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
கிளானா ஜெயா, அம்பாங் எல்.ஆர்.டி., புத்ரா ஜெயா எம்.ஆர்.டி. மற்றும் கே.எல். மோனோ ரயில் தடங்களை உள்ளக்கிய ரெப்பிட் ரயில் சேவையில் இந்த திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் பிரசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியு ஃபூக் கூறினார்.
இந்த திட்டத்திற்கான வடிவமைப்பு மற்றும் மேம் பாட்டுப் பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கப்படும் எனக் கூறிய அவர், ஓராண்டிற்குப் பிறகு இத்திட்டம் அமலாக்கம் காணும் என்றார்.
இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப் பட்டவுடன் தற்போது அமலில் உள்ள டச் அண்ட் கோ மற்றும் டோக்கன் முறைக்கு மாற்றாக டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகள் வாயிலாகவும் கட்டணத்தைச் செலுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
திறந்த கட்டண முறையை ஏற்கக்கூடிய 50 விழுக் காட்டுத் தளங்களை அமைக்க வரும் 2025 பிப்ரவரி வரை 11 மாதங்கள் பிரசரானாவுக்குத் தேவைப்படும் என அவர் மக்களவையில் இன்று தெரிவித்தார்.
வரும் 2025 ஆகஸ்டு மாதத்திற்குள் அனைத்து நிலையங்களிலும் இந்த வசதி முழுமையாக தயாராவிடும். அடுத்தக் கட்டமாக கியூ.ஆர். குறியீடு மூலம் கட்டணம் செலுத்தக்கூடிய வசதி இதில் உள்ளடக்கப்படும் என்றார் அவர்.
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் பொது போக்குவரத்து சேவைகளில் திறந்த கட்டண முறையை அமல்படுத்தும் திட்டத்தின் மேம்பாடு குறித்து சுபாங் தொகுதி உறுப்பினர் வோங் சென் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.