ACTIVITIES AND ADSMEDIA STATEMENT

பாதுகாவலர் சாவடியில் கைவிடப்பட்ட நான்கு சகோதரர்கள் மீட்பு

ஈப்போ,  நவ 24- இங்குள்ள பேராக் தெங்கா  மாவட்ட நிர்வாக வளாகத்தின் பாதுகாவலர்  சாவடியின்  முன் நேற்று 10 மாத குழந்தை உட்பட நான்கு உடன்பிறப்புகள் கைவிடப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான தகவல் மாவட்ட சமூக நலத் துறை அதிகாரி மூலம் மாலை 5.39 மணியளவில் தங்களுக்கு கிடைத்தாக மத்திய பேராக் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ஹஃபிசுல் ஹெல்மி ஹம்சா கூறினார்.

காலை 10.50 மணியளவில்  இந்த சம்பவம்  நிகழ்ந்ததாகக் கூறிய அவர்,  11 மற்றும் 3 வயதுடைய இரண்டு சிறுவர்கள், 10 மாத ஆண் குழந்தை மற்றும் 6 வயது சிறுமி ஆகியோர் அங்கு இருந்தனர்  என்று இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

டோயோட்டா காரில் வந்த  அடையாளம் தெரியாத பெண் ஒருவரால்  உடன்பிறப்புகள் கைவிடப்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது  என்று ஹஃபீசுல் ஹெல்மி கூறினார்.

போத்தா நகருக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிலிருந்து தாங்கள் துரத்தியடிக்கப்பட்டதாகவும் அடையாளம் தெரியாத பெண் தனது  காரில் இங்கு விட்டுச் சென்றதாகவும் 11 வயது சிறுவனிடம் பெறப்பட்டத் தகவல்கள் வழி தெரிய வந்தது என்றார் அவர்.

பால் மற்றும் நாப்கின்கள்  அடங்கிய பிளாஸ்டிக் பொட்டலமும் அவர்களிடம் இருந்தது என்றார் அவர்.

நான்கு உடன்பிறப்புகளும் பாதுகாப்பு மற்றும் விசாரணை நோக்கங்களுக்காக கோப்பெங்  பராமரிப்பு மையத்திற்கு  அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களைக் கண்டறிய போலீசார் மேல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் அவர்.


Pengarang :