புக்கிட் மெர்தாஜம், டிச 9- வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த உணவகத்தை மோதியதில் அதன் ஓட்டுநர் படுகாயங்களுக்குள்ளானார். இச்சம்பவம் இங்குள்ள குபாங் செமாங், ஜாலான் சுங்கை செமாம்புவில் இன்று விடியற்காலை நிகழ்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் இன்று விடியற்காலை 1.27 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை செயல்பாட்டு மையத்தின் பேச்சாளர் கூறினார்.
தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்த போது யாப் சுன் ஹூவாட் (வயது 30) என்ற நபர் காரில் சிக்கிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
அந்த ஆடவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த உணவகத்தை மோதியதாக நம்பப்படுகிறது. இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த உணவகத்தில் யாரும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஓட்டுநரை தீயணைப்பு வீரர்கள் விடியற்காலை 1.52 மணியளவில் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்றார் அவர்.